கமல் தொகுத்து வழங்கி சின்னத்திரையில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. டைட்டில் வின்னராக ராஜூ அறிவிக்கப்பட்டார். பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா இரண்டாவது இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகமான ரசிகர்கள் பெற்றதும் பிரியங்கா தான், நிறைய நெகடிவ் விமர்சனங்களை பெற்றதும் பிரியங்கா தான்.

பிக் பாஸில் இவர் அடித்த லூட்டிகள் அதிக பேரால் ரசிக்கப்பட்டாலும் நரியங்கா, சகுனி, என பிரியங்காவை வறுத்தெடுத்த நெட்டிசன்களும் உண்டு. அதற்கு காரணம், பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா வெளிப்படுத்திய எமோஷன்கள் தான். தாமரையுடன் சண்டை போட்டு விட்டு, அடுத்த சில மணி நேரங்களில் முத்தம் கொடுத்து சேர்ந்து கொள்வது. நிரூப், அபிஷேக் ஃபிரண்ட்ஷிப் என பிரியங்காவின் சில குணங்கள் ரசிகர்களுக்கு கோபத்தை வர வைத்தன. ஆனால் இதை எல்லாம் கடந்து தற்போது பிக் பாஸ் 5ல் இரண்டாம் இடத்தை பிடித்து மக்களுக்கு பிடித்த மன கவர்ந்த போட்டியாளர் என்ற பெயரையும் பிரியங்கா பெற்று விட்டார்.

பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போது போட்டியாளர்கள் பலர் தங்கள் மனதுக்கு பிடித்தமான நெருக்கமானவர்கள் குறித்து உரையாடினர். ஆனால் பிரியங்கா தனது அம்மா, தம்பி குறித்தே அதிகம் பேசினார். தனது கணவர் பிரவீனை குறித்து அவர் பேசவே இல்லை. இது நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. பலர் பிரியங்கா பிரவீனை விவாகரத்து செய்து விட்டார் எனவும் சமூகவலைதளத்தில் செய்திகளை பதிவிட்டனர்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிரியங்கா தனது சமூகவலைதளப் பக்கங்களின் வாயிலாக ரசிகர்களிடையே உரையாடினார். அதில், பிரியங்கா தனது ரசிகர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார். மேலும், தனக்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி. தன்னை வெறுத்தவர்களுக்கும் நன்றி. என்னை மன்னித்து விடுங்கள். இதற்குப் பிறகு உங்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் கொடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.

அப்போது பலர் அவரது கணவர் குறித்தான கேள்விகளையே எழுப்பினர். அதற்கு பிரியங்கா எல்லோரும் பிரவீனை பற்றி கேட்கிறீர்கள். இதற்கான பதிலை நான் அடுத்த வீடியோவில் சொல்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி கொண்டிருந்த போது அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு குழுவில் பிரவீன் பணியாற்றினார். அப்போது அவர்களிடையே காதல் மலர்ந்து பின் பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டில் பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார்.

பெரிய நிறுவனங்களின் விதிப்படி ஒரே நிகழ்ச்சியில் உறவுமுறையில் உள்ளவர்கள் ஒன்றாக பணி செய்ய முடியாது. அதனால் பிரவீன் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியிலிருந்து ‘பிக்பாஸ் ஜோடி’ என்னும் தயாரிப்பு குழுவுக்கு மாறினார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் குழுவிலும் பிரவீன் இருந்ததால் பிரியங்கா அவரை குறித்து எதுவும் பிக் பாஸ் வீட்டிலிருந்த போது பேசவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.