நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா,சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது.

நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. தற்போது ‘பிக்பாஸ் சீசன் 5’ ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வழக்கம்போல் இறுதி கட்டம் என்பதால் பரபரப்பு பஞ்சம் இல்லாமல் கடந்த சில நாள்களாக நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘பிக்பாஸ் சீசன் 5’-இல் ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை பெற்ற போட்டியாளர் சிபி சக்கரவர்த்தி. இவருடைய நேர்மை, எதார்த்தமான குணமும் ரசிகர்களுக்கு பிடித்து போனது. அதுமட்டுமல்லாது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களை விட சிபி சக்கரவர்த்தியின் அணுகு முறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் இறுதி வரை பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு சிபி அங்கிருந்து விடைப்பெற்றார். இந்த செயலால் சிபியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிபி பிக்பாஸ் வீட்டிலிருந்த வரை அனைத்துப்போட்டிகளிலும் தன்னுடைய முழு பலத்தையும் கொடுத்து வெற்றிப்பெற்றார். சென்ற வாரம் எவிக்சன் பட்டியலில் இடம் பெற்றிருந்த சிபி சக்கரவர்த்தி, கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டார்.
இந்த நிலையில் சிபி, ரூ.12 லட்சம் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். சிபியின் இந்த செயல் புத்திசாலிதனமானது என சிலர் சமூகவலைதளத்தில் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது சிபியின் இந்த செயல் சமூகவலைதளத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. சிபி ரூ.12 லட்சத்தை எடுத்து வெளியேறியது நல்ல முடிவு தான். அவரது எதிர்காலம் சிறப்பாக அமையுட்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸில் கடந்த சீசன் வரை ரூ.5 லட்சம் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இந்த சீசனில் ரூ.12 லட்சம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.