தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின் தனது கடின உழைப்பால் நடிகராக உயர்ந்தவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. பிஸியான நடிகர்களில் முதலிடத்தில் இருக்கும் விஜய்சேதுபதி வருடத்திற்கு குறைந்து பத்து படங்களிலாவது நடித்து விடுவார்.

விஜய்சேதுபதி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் தடம் பதித்துள்ளார். தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த விஜய்சேதுபதி தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
விஜய்சேதுபதி திரைப்படங்களை தவிர வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். வெப் சீரிஸும் திரைப்படங்களை போன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு பெற்று வருவதால் வெப் சீரிஸிலும் நடிக்க விஜய்சேதுபதி ஆர்வம் காட்டிவருகிறார். அதன்படி ஒரு வெப் சீரிஸ் குழுவினர் விஜய்சேதுபதியை அணுகி கதையை கூறியுள்ளனர். இதன் கதையை கேட்டவுடன் விஜய்சேதுபதிக்கு பிடித்துப்போய் அக்குழுவினருடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டார்.

ஆனால் வெப் சீரிஸில் நடிப்பதற்கு தனக்கு சம்பளமாக ரூ.30 கோடி வழங்க வேண்டுமென கேட்டுகொண்டதாகவும் இதைக்கேட்டு இயக்குநர், தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் விஜய்சேதுபதி தற்போது தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சிலமாதங்களாகவே சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட தமிழ் திரையுலகினர் தங்களது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியான வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.