தமிழ் திரையுலகில் கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருப்பவர் நடிகர் தனுஷ். இப்போது கூட வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். தனுஷ் தமிழ் மட்டுமல்லாது ஹாலிவுட், பாலிவுட் என அனைத்து திரைத்துறையில் கால்பதித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் முன்னணி நடிகராக வளரத் தொடங்கிய காலகட்டத்தில் ரஜினி காந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், தங்களுடைய 18 ஆண்டு கால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 18 ஆண்டுகள் நண்பர்களாக தம்பதிகளாக பெற்றோர்களாக, நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். இனி நானும் ஐஸ்வர்யாவும் தனித்தனியே வாழ்க்கையை தொடரவுள்ளோம். எங்களை நாங்களே தனித்தனியாக புரிந்து கொள்ளும் நேரம் இது!

எங்களின் இந்த முடிவிற்கு மதிப்பளித்து அனைவரும் உறுதுணையாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அன்புடன் தனுஷ்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி தங்களது குழந்தைகளுடன் கோவில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது.

அதே போன்றதொரு பதிவை ஐஸ்வர்யாவும் தனது சமூகவலைதளப்பக்கதில் பதிவிட்டுள்ளார். இருவரின் இந்த முடிவு ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டுமல்லாது சமூகவலைதளங்களில் இது ட்ரெண்டாகியும் வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு சமந்தா – நாகசைதன்யா இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இது தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த அதிர்வு அடங்குவதற்குள் தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி பிரிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவும் முதல் திருமணத்தை விவகாரத்து செய்து ஒரு வருடத்திற்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.